வெள்ளி, டிசம்பர் 04, 2009

நீயும் நானும்



நீ நான்
வரும் போது வராததும்
வராத போது வருவதும்
வழக்கமாகி போனது
உனக்கும் எனக்கும்!

-மீனா

வியாழன், அக்டோபர் 15, 2009

இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்!



ஏற்றுக தீபம்
எழிலொளி சூழ்கவே
இன்பம் பெருக
எல்லோரும் வாழ்கவே
ஆற்றுக பணி
அவனியெல்லாம் சிறக்கவே
அன்பு பெருக
அறநெறி ஓங்கவே
போற்றுக நம்மொழி
புகலுக செம்மொழி
புவனம் ஏத்த புகழுற
வாழ்க வாழ்கவே

இத்தீபத்திருநாளில்
இதயம் நிறைந்து
இன்பம் பொங்கும்
இனிய தீபாவளி நல்
வாழ்த்துகள்!

வெள்ளி, செப்டம்பர் 25, 2009

நவசக்தி நாயகியே.....

கலையாத கனவுகளின் நினைவான நிலவொளியே

அலையாடும் நெஞ்சிற்கு ஆறுதலாய் வருபவளே

மலையரசி பெற்றெடுத்த மாதவத்தின் பெரும்பயனே

குலையாத பேரெழிலின் அழியாத நித்தியமே

வலையாடும் வேல்விழியால் வண்ணத்தை இறைப்பவளே

நிலையாக என்நெஞ்சில் நின்றாடும் சுந்தரியே

சிலையாக நின்றென்னைச் சித்தம் குலையச் செய்பவளே

கலையாவும் பயிலவைக்கும் கருத்தான துர்க்கையளே ! 1


உனையெண்ணிப் பாடிவரும் அடியவரின் துயர் தீர்ப்பாய்

உனையன்றி வேறில்லை என்பவரை உயர்த்திடுவாய்

உன்னருளால் இயங்குகிறேன் உலகாளும் தூயவளே

உன்பெருமை பாடுகிறேன் உத்தமியே சுந்தரியே

உன்கண்ணின் ஒளியாலே என்வாழ்வு சிறக்குதம்மா

உன்கைகள் அணைப்பாலே என்மேனி சிலிர்க்குதம்மா

உன்னைப்போல் ஓர்தெய்வம் உலகினில்நான் கண்டதில்லை

உண்மையிது சொல்லிவைத்தேன் உண்மையே நீதானம்மா! 2


ஏனென்று கேளாமல் என்னுள்ளே நீ புகுந்தாய்

தானாக வந்தென்னில் தணியாத சுகம் தந்தாய்

ஊனாடும் உயிரெல்லாம் நிறைந்தங்கே ஒளிசெய்தாய்

மீனாடும் கண்ணாலே மனதினிலே நிறைந்துவிட்டாய்

தேனூறும் சொல்லாலே தித்திக்கும் தமிழ்தந்தாய்

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியானாய்

நானாக நானில்லை என்னுமோர் நிலைதந்தாய்

பூணாரம் பூண்டவளே பொன்மகளே துர்க்கையம்மா! 3


மலையமான் மகளாகி மறையோனுக்காய்த் தவமிருந்தாய்

கலையாத பக்தியுடன் ஊசிமுனைத் தவமிருந்தாய்

தலையாடும் கிழவனாகச் சிவன்வரவே நீசிரித்தாய்

பிழையான மொழிபேசும் விருத்தனையே நீசினந்தாய்

பிறழாத பணிவுடனே பணிவிடைநீ செய்திருந்தாய்

அழகான தன் தோற்றம் சிவன்காட்ட நீமகிழ்ந்தாய்

மனங்கொண்ட மணவாளன் மனம்மகிழ மணமுடித்தாய்

எனையாளும் தாய்நீயே என்றென்றும் எனைக்காப்பாய்! 4


பாற்கடலில் நீயுதித்துப் பரந்தாமன் மனையானாய்

ஆர்ப்பரிக்கும் அலைகடலில் அழகே நீ நிதியானாய்

மாலவனின் மார்பினிலே குடியிருக்கும் மங்கையானாய்

சூலம் ஏந்தியேநீ மஹிஷசுர மர்த்தினியானாய்

விஷ்ணு மாயையாய்நீ மாலினைத் துயிலெழுப்பினாய்

மதுகைடப வதம்செய்த மனோஹரியும் நீயம்மா

வணங்கிவரும் அடியவரின் மனதுறையும் பொருள் நீயே

நனியனேன் என்னையும் காப்பதுவுன் கடனம்மா! 5


சொல்விளக்கும்பொருளானாய் சொல்விளக்கமே நீயானாய்

பல்லோரும் போற்றிடவே பார்புகழும் உருவானாய்

கல்லார்க்கும் கற்றார்க்கும் காட்டு மறைப்பொருளானாய்

எல்லாமும் நீயாகி மஹா ஸரஸ்வதியாய்த் திகழ்ந்தாய்

பல்வினைக்கும் சொந்தமானக் கொடியவரை வதம் செய்தாய்

வல்வினையால் வருந்துவோரின் துன்பமெல்லாம் நீ துடைத்தாய்

கல்விக்கே அதிபதியாய் கலைமகளெனும் பேர்பெற்றாய்

சொல்லாலே துதிக்கின்றேன் தூயவளே காத்திடம்மா! 6


ஏழுலகும் போற்றுகின்ற எங்கள்குல நாயகியே

ஏழ்கடலும் வற்றச்செய்யும் ஹூங்காரம் கொண்டவளே

ஏழுதலை நாகமுன்றன் முடிமேலே ஆடுதம்மா

ஏழுசுரம் பாடிவரும் இன்னிசையின் நாயகியே

ஏழ்முனிவர் கைதொழுதுன் அடிபோற்றி வந்தாரம்மா

ஏழேழு பிறவிக்கும் என்றன் துணையானவளே

ஏழ்நிலையில் வீற்றிருந்து யோகியர்க்கு அருள்பவளே

ஏழையெனைக் காத்திடவே எழுந்தோடி வாருமம்மா! 7


எட்டுத்திக்கும் புகழ்மணக்கும் ஏகாம்பரி நாரணியே

எட்டாக்கனியாக எங்கிருந்தோ அருள்பவளே

எட்டியுன்னைக் கண்டிடவோ எனக்குள்ளே தெரிபவளே

எட்டிரண்டு கைகள் கொண்ட எனையாளும் துர்க்கையளே

எட்டிவரும் துன்பங்கள் எனைவருத்தச் செய்யாதே

எட்டாத இன்பங்கள் எனக்கிங்கே இனிவேண்டாம்

எட்டியுன்றன் கால்பிடித்தேன் எனையேற்றுக் கொள்ளம்மா

தட்டாதிப் பாலகனைப் பரிந்தேற்றுக் கொள்ளம்மா! 8


நவமணியே! நவநிதியே! நல்லோரின் துணை நீயே!

நவாவரண நாயகியே! நினைத்தபோது வந்திடுவாய்!

நவயோக சுந்தரியே! நாடுமன்பர் நலம்சேர்ப்பாய்!

நவகோண நாயகியே! நாளுமின்பம் கூட்டிடுவாய்!

நவநவமாய்ப் பொலிபவளே! நெஞ்சினிலே நீயிருப்பாய்!

நவதுர்கை நாயகியே! நோய்பிறப்பு தீர்த்திடுவாய்!

நவசக்தி நங்கையளே! நாதமுடி வானவளே!

நவராத்ரியில் நினைப்பணிந்தேன்! நல்வரம் நீ தருவாயம்மா! 9


-சங்கர்குமார்

வியாழன், செப்டம்பர் 24, 2009

நாட்டரசன்கோட்டை நாயகி !

கண்களுக்கு ஒளிதரும் கண்ணுடைய நாயகி கண்ணாத்தாள்!

சிவகங்கை தேவஸ்தானம் மதுராந்தகி நாச்சியார் ஆளுகைக்குட்பட்ட 86 திருக்கோயில்களில் சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவிலும் ஒன்றாகும். முத்துக்குட்டிப்புலவர் என்பவர் ”கண்ணுடைய நாயகி அம்மன் பள்ளு என்று கண்ணாத்தாளின் மகிமையை சிற்றிலக்கியமாகவே படைத்திருக்கிறார்!.

கண்ணுடையநாயகி 6 சகோதரிகளுடன் தோன்றியதாக முத்துக்குட்டிப்புலவர் சொல்கிறார்..

விரும்பு காளையில் வாள்மேல் நடந்தாள் வாளைப்பனங்குடி பெரியநாயகி , வெற்றி யூரினில் அம்மன் , அரும் பொருளுவாட்டிப் பெரியாள் , அடுத்த மங்கலந்தன்னில் வாழ் அறியவள் இவளாது பெண்களுக்கும் பெரியவளார்க்கும் பெரியவள் பெரும்புரியெல்லாம் பெற்றவள் என்னைப் பெற்றதாய் கன்ணுடையவள் என்று.

அந்த 6 அன்புச்சகோதரிகள் காளையார் கோவில் வாள்மேல் நடந்த அம்மன், பாகனேரி புல்ல நாயகி அம்மன், பனங்குடி பெரிய நாயகி அம்மன், வெற்றியூர் அம்மன், உருவாட்டி பெரிய நாயகி அம்மன், மறவங்கலத்தில் அரிய நாச்சி அம்மன் ஆகியோர்கள் ஆவார்கள்.

கண் சம்பந்தப்பட்ட நோய் எதுவாய் இருந்தாலும் கண்ணாத்தாளை வேண்டி(வெள்ளியினால் செய்த) கண்மலர் வைத்து வணங்கினால் போதும்.அதுபோல கண் மற்றும் உடம்பின் எந்த பாகமென்றாலும் நோய் குணமாக வேண்டி மாவிளக்கு(அரிசியுடன் வெல்லம் சேர்த்து இடித்து செய்வது) ஏற்றுவதாக வேண்டி அம்மன் பாதத்தில் ஏற்றி வைத்து அவ்விளக்கை எடுத்து உடம்பில் பாதிக்கப்பட்ட இடத்தில் சிறு துணியை விரித்து அதன்மேல் வைத்து எடுத்து குணமாக்கு தாயே என்று வணங்கி பலன் கண்டவர்களும் ஏராளம்!

நாட்டரசன்கோட்டையில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறும் களியாட்டம் வெகு சிறப்பானது. மேலும் பதினெட்டுச்சித்தர்களில் ஒருவரான அழுகுணிச்சித்தர் இவ்வூரில்த்தான் அடங்கியுள்ளார் என்பதும் கம்பன் சமாதி இங்குதான் உள்ளது என்பதும்
போற்றுதற்குரியதாகும்!.

அவிச்ச நெல்லும் முளைக்கும் அதிசயம் இந்த ஊரில்த்தான் நடப்பதாக பக்தர்கள் சொல்கிறார்கள்!

கண்ணாத்தாள் கோவிலின் முன்பு உள்ள தெப்பக்குளமும், கோவிலின் முகப்பு மண்டபமும்,சிற்பங்களும் அவசியம் பார்த்து பயனடைய வேண்டியவை.

புதன், செப்டம்பர் 23, 2009

இரண்டிரண்டு...!

வருவதும் போவதும் இரண்டு ---இன்பம்,துன்பம்

வந்தால் போகாதது இரண்டு --- புகழ்,பழி

போனால் வராதது இரண்டு --- மானம்,உயிர்

தானாக வருவது இரண்டு ---இளமை,முதுமை

நம்முடன் வருவது இரண்டு ---பாவம்,புண்ணியம்

அடக்க முடியாதது இரண்டு ---ஆசை,துக்கம்

தவிர்க்க முடியாதது இரண்டு ---பசி,தாகம்

நம்மால் பிரிக்கமுடியாதது இரண்டு ---பந்தம்,பாசம்

அழிவைத் தருவது இரண்டு ---பொறாமை,கோபம்

எல்லோருக்கும் சமமானது இரண்டு ---பிறப்பு,இறப்பு

செவ்வாய், ஜூன் 30, 2009

கதையல்ல…..இது…..!

இந்த புளிய மரத்தில்தான் எவ்வளவு பூ!! மறைந்து கொண்டிருக்கும் மஞ்சள் வெயிலில் அதன் நிறம்..! இள மஞ்சள்? இல்ல பழுப்பு..? நுனியில் சின்னதா வளஞ்சு கொஞ்சமா சிகப்பு!வினோதமான(புளியம்)பூ!அந்தச் சின்னப்பூ அழகுபோல இருக்கு! இன்னும் கொஞ்ச நாளில் காய்ச்சு குலுங்கும்! ஆனால் யாரும் தேடுறதில்லை. அது பூக்கறதையும் காய்க்கறதையுமாவது யாராவது கவனிப்பார்களா? முதலில் பூக்கள்,அதுக்கப்புறம் குட்டி குட்டியா இளம் பச்சை நிறத்துல பிஞ்சு!எப்போ பெரிசாகுது!

அட! ரெண்டு நாலாச்சு இந்தப்பக்கமா வந்து..அதுக்குள்ள இப்ப ஓடுகள் பழுப்பு நிறமாக மாறி! ஓ.. பழுத்து விட்டது!. ம்..ம் இன்னும் ரெண்டு மூணு நாள்ல ஒவ்வொன்னா கீழே விழுக ஆரம்பிச்சுடும்..! இப்படி தினமும் எவ்வளவு புளியம்பழம் கொட்டுது ஆனா யாரும் தேடாம, அந்த வீட்டுக்கு முன்னாடி நிறுத்துற காருகளுக்கு அடியில் நசுங்கி... கொஞ்சம் கொஞ்சமாய் அவ்வளவும் காணாம போயிரும்! இல்லை இதோ உருண்டையா சதுரமா கோணல் மாணலாய் காப்பித்தூள் நிறத்தில் கொட்டிக் கிடக்கும் அதோட விதைகள்! கொஞ்ச நாளில் துளிர்விடத் தொடங்கிறும் ஆனா அதையும் வர விடாமல் வாரி வழித்து எங்கோ குப்பையோடு குப்பையாக அள்ளி கொட்டி மண்ணோடு மண்ணாக…..

நான் மட்டும்தான் ஒவ்வொரு நாளும் அதன் மாற்றத்தை கவனிக்கிறேனா?!. இந்த மரத்தை..இல்ல செடிய நட்டவர்கள் இப்போது எங்கே இருப்பார்கள்?!அது வாடகை வீடு, நிச்சயம் அந்த வீட்டில இப்ப இருக்கிறவர்களாய் இருக்காது.இப்ப இப்படி பூத்து,குலுங்கி நிற்கும் இந்த மரத்தை நினைத்துப்பார்ப்பார்களா? இதை நட்டவர்கள்!

ஸ்…அய்யய்யொ யாராவது பாக்கிறாங்களா என்ன..! நல்லவேளை தடுமாறி விழுகாம சமாளிச்சிட்டோம் யப்பா..!

‘இதென்ன இந்த நாய் இப்படி பாக்குது! பின்னாடியே வேற வருதே! வேகமா போகக்கூடாது, பாத்தும் மெதுவாவே போகணும்..இன்னமும் அது கூடவே வருதே… கடவுளே..! நல்லவேளை அது அங்கேயே நிக்கிறமாதிரி தெரியுது..கடவுளே… கடவுளே… அட என்னது திரும்பி போகுது! ஓ...கொஞ்ச தூரம் வரை எனக்கு பாதுகாப்பு கொடுத்துச்சோ!சே.. நாய்ன்னாவே விரட்டும் கடிக்கும்னே எப்பவும் நம்மளா பயந்துகிட்டு…

அதுக்குள்ள இருட்டிட்டு வருதே.. தினமும் இப்படித்தான். நாளைக்கு கொஞ்சம் சீக்கிறமா கிளம்பி விடணும்.வேகமா நடந்தாத்தான் நல்லா இருட்டுறதுக்குள்ள போயிடலாம். என்ன இப்படி வேர்த்து கொட்டுது.. வீட்டுக்கு போனவுடனே இந்த ஷூவை கழட்டி சாக்சையும் கழட்டினாத் தான் நிம்மதி, காலுக்குள்ள கச கசன்னு … நாளைக்கு இந்த சாக்சை தொவைக்கப்போட்டுறணும்.. வாச லைட்ட போட்டுட்டு போயிருக்கணும் எப்படி இருட்டாயிருச்சு..! தண்ணி என்னமா தவிக்கிது..! உள்ள போன ஒடனே மடக் மடக்ன்னு தண்ணிய குடிக்கணும்.. ஆஹா என்ன சுகம்! இந்த தண்ணியில என்னதான் இருக்கோ என்ன ருசி!.

இதுகளுக்கு வேற சாப்பாடு போடணுமே..அமைதியா இருந்துட்டு இந்த முயல் குட்டி ரெண்டுகளும் எப்படித்தான் தெரிஞ்சுகிதுங்களோ நா வந்ததை!சாப்பாட்டுக் கிண்ணத்தை தட்டுறதும் வாயில கவ்வி முன் பக்கமா போட்டு அதுகளுக்கு ரொம்ப பசிங்கறத சொல்லுறதும்.. அதிசயம்தான்!


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அடக்கடவுளே மறுபடி ஒரு தற்கொலையா…?!ஏன் இந்த நடிகைங்கள்லாம் இப்படி தற்கொலை செஞ்சுக்கணும்?இதுதானா விடுபடறதுக்கு வழி?இப்படி செய்யலாமா?இவங்களுக்குன்னு அம்மா,அப்பா தம்பி தங்கச்சி அண்ணன் அக்கா எவ்வளவு சொந்தக்காரங்க? இன்னும் வாழ்க்கையில என்னவெல்லாமோ நடக்க இருக்குது எல்லாத்தயும் விட்டுட்டு ஏன் இப்படி சாகணும்?!

எவனோ ஒருத்தனை விரும்பி சந்தர்ப்ப சூழ்நிலையால விட்டு பிரிஞ்சு போயிட்டா அதுக்காக,செத்து மடிவாங்களா!வாழ்க்கையில இன்னும் எவ்வளவோ இருக்கே?

காதல் மட்டுந்தானா வாழ்க்கை?…இப்படி மத்தவங்க கேட்பது சரி!ஆனால் ஒருவேளை யாருமே அவ(ர்க)ளின் நிலையில் நின்று பார்த்தால்த்தான் தெரியுமோ?என்னவோ ஏதாயிருந்தாலும் சாவைத் தவிர்க்கலாம்..ப்ச்ச..


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


எரிமலையாய் குமுறுகிறது ஏன்? ஏன்? ஏன்? என்று நாலாபுறமும் கேள்விகள் ஆங்காராமாய் காதில் கேட்கிறது கழுத்தின் பின்புறம் நரம்பெல்லாம் துடித்து இசிக்கின்றது உள்ளமெல்லாம் வலி சொல்லொணாத வலி இதய பாரம் தாங்க முடியவில்லை எதுவும் வேண்டாம் எதுவும் வேண்டாம் என்ன செய்யலாம் விடுதலை இல்லையா? மனம் வெறுப்பால் துவளுகிறது ஓட முடியவில்லை ஒட்டுறவாடமும் பிடிக்கவில்லை காலம் போய்க்கொண்டிருக்கிறது மீண்டும் மீண்டும் இதே.. என்ன செய்ய

சம்பாதிக்கிறோம் என்ற அகங்காரம் தான் இல்லாவிட்டால் எதுவும் இல்லை என்ற ஆணவம் பிறக்கும்போதே எழுதிவிட்டான் இறைவன், இவரவர்களுக்கு இதுதான் என்று யாரும் யாரையும் தாங்கவில்லை தாங்குகிறவர்கள் தவற விட்டாலும் எதுவும் நின்று விடாது அதெற்கென்று அவன் ஏற்கனவே வழி வைத்திருப்பான் எல்லாம் தானாக அடுத்ததை நோக்கி நகர்ந்து கொண்டுதான் இருக்கும் அதுதான் இறை ரகசியம் இதை அறியாத பிறவிகளுக்கு ஆணவம் அகங்காரம் என்ற மாயை கண்ணை கட்டி விடும் .

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

மரியா இரண்டு வாரம் வேலைக்கு வரமாட்டா..எப்படி சமாளிக்கப் போறோம்னு நெனச்ச மாதிரி.பத்து நாளா வீடு துடைக்காம அங்கங்கே அழுக்குத்திட்டு திட்டா தெரியுது…அயன் செய்ய வேண்டிய துணி வேற மலையாக குமுஞ்சு போச்சு..

இத்தனை நாளா பெஞ்ச மழையில செடிகளுக்கு தண்ணி ஊத்துற வேலை இல்லாமல் இருந்துச்சு, இனிமே அதுவும் சேர்ந்துடும். ஆனால் தண்ணி ஊத்துறதும் ஒரு சுகமாத்தான் இருக்கு!

‘என்ன ஒரு அழகு இந்த மஞ்ச பூ! கனகாம்பரத்தின் பரம்பரையோ! அந்த கனகாம்பரத்துல பச்சை நிறத்தில மேல அழகான ஆரஞ்சு நிறத்தில இருக்கும் பூ !. இதில அதே பச்சை நிறத்துல மேல அழகான மஞ்சள் நிறத்துல இருக்க பூவுல! இடையிடையே வெள்ளையா ஓரியா நீள நீளமா சின்ன சின்ன இதழோட! அழகு! இலைகள் கனகாம்பர இலைகள் போலவே! அதை விட சிறிது ஓரியாக..! சாதாரணமாக இருக்கும் செடி உரத்தின் காரணமோ என்னவோ தெரியலை கொழு கொழுன்னு பச்சையும் மஞ்சளும் வெள்ளையுமா! தள தளன்னு! இன்னும் நிறைய வரிசையா இதையே வச்சா அழகா இருக்கும்!. இன்னும் தொட்டிகள் வேற வாங்கணும்.அன்னைக்கு ஒரு நாள் நர்சரியில் பார்த்த வெள்ளை நிறத்தில சந்தன கிண்ணம் மாதிரி இருந்த அந்த தொட்டியை வாங்கி வந்து இந்த செடியை அதுல வைக்கணும்.இன்னும் அழகா இருக்கும்!

செடிகளுக்கிடையில் சின்ன சின்னதா வேண்டாத செடி! மஞ்சக் காமாலைக்கு நல்லதுன்னுசொல்வாங்க கீளா நெல்லியோ என்னவோ, சின்..னதா அதில் வரிசை வரிசையா அரிசி மாதிரி இலை! இலைக்கு நடு நடுவில பச்சை நிறத்தில் தொங்குற கடுகு மாதிரி காய்! இந்த செடிய பிடுங்கி எடுக்கறதுக்கே மனசில்லை…

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

சுத்தி சுத்தி வந்தும் ஒன்றும் புரியவில்லை ஏன் எதற்கென்று மனமே ஒரு சூன்யமாகி போன மாதிரி,

‘சூன்யம் ‘ எதற்கு அப்படி சொல்லவேண்டும்? எங்கெங்கெனாதபடி இறைவன் நிறைந்திருக்கின்றான் என்னும் போது ‘சூன்யம்’ என்றொரு சொல் எங்கிருந்து எப்படி வந்தது! மனிதர்கள் அவர்களாகவே எதை எதையோ உண்டு பண்ணி அதற்கு அவர்களாகவே ஒரு பெயர் வைத்து.எதற்காகவாவது அடித்துக் கொள்வதிலேயே வாழ்க்கை பெரும்பாலும் முடிந்து விடுகிறது. இதன் நடுவில் அவ்வப்போது கொஞ்சம் இடை வெளியில் பெரிய மனது வைத்து அவனை நினைத்து(?) ஆலயம் சென்று..(இதுவும் கூட அவன் அழைத்தால் மட்டுமே!).

நாம் கல்லை எடுத்து நாயின் மீது வீசினால் நாய் கல்லை நோக்கி பாயாது வீசிய நம் மேல்த்தானே பாயும் ? நமக்கு ஏற்படும் நல்லது கெட்டது யாவும் விணைப்பயனாய் வருகிறதென்பதை உணராமல் அதை செய்தோர் மீது கோபம் கொள்கிறோம் இப்படி பல விஷயங்கள் புரிபடாமலே போகிறது.

அது புரியும் போது தவறுகள் எல்லாம் செய்து முடித்து விடுகிறோம் அதை முன்பே ஏன் உணர மாட்டோமென்கிறோம்?அதற்கு என்ன செய்ய வேண்டும்?

கண்களே கருவிழிகளே நீங்கள் எதை பார்க்கிறீர்கள்’
சின்னஞ்சிறு செவிகளே நீங்கள் எதை கேட்கிறீர்கள்’
பிஞ்சுக்கரங்களே நீங்கள் எதை செய்கிறீர்கள்’
தளர் நடை போடும் கால்களே நீங்கள் எங்கு செல்கிறீர்கள்’
இனிய இதயமே நீ எதை எண்ணுகிறாய்
யாவருக்கும் தந்தையான இறைவன் நம்முடைய ஒவ்வொரு செயலையும் மேலிருந்து உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறான்.

ஆதலால் எல்லாவற்றிலும் எப்போதும் கவனமுடன் இருங்கள் என்று சிறுவயதில் இருந்து அதற்கான பக்குவத்தை அந்த பிஞ்சு உள்ளங்களில் விதைத்தால்?

ஆமா.....

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


.....எழுதுவது,பேசுவது,படிப்பது போன்று.....நிகழ்விற்கு தகுந்தாற்போல் எப்போதும் தொடர்கிறது...கதைபோன்ற கதையல்லாத எண்ணங்கள்...!

...இப்ப அனுப்புகிறோமே...?அதனலென்ன அதான் இன்னைக்கி ராத்திரி 12 மணிவரைக்கும் நேரம் இருக்……!

வியாழன், ஏப்ரல் 30, 2009

கனவு!

சினிமாபடம் போல் எதிரே விரிகிறது காட்சி!

சற்று பருத்த தேகம்,வெண்ணிற தலைமுடி,வெண்தாடி, மீசை முகத்தை மறைத்திருக்க வெண்ணிற வேஷ்டி சட்டையணிந்து... வணக்கத்திற்குரிய மகான் அவர், சோபாவில் அமர்ந்திருக்கிறார்.சுற்றிலும் யார் யாரோ!

அவருக்கு இடது புறத்தில் அமர்ந்திருக்கும் ஒருவர் வீட்டின் உள் புறம் பார்த்து ஒரு பெயர் சொல்லி அழைக்கிறார்! அது கேட்டு ஐந்து வயது அழகுச்சிறுமி ஒருத்தி உள்ளிருந்து துள்ளி ஓடி வருகிறாள்!

அழைத்தவர் சிறுமியை அறிமுகப்படுத்த மலர்ந்த முகத்துடன் குழந்தை வணங்கி நிற்க அம்மகான் குனிந்து எதையோ எடுத்து இருகைகளினாலும் சிறுமியின் தலை தொட்டு ஆசீர்வதிக்கிறார், நல்லாரும்மா என்கிறார்!

அந்த சின்னஞ்சிறுபெண் தலையில் கொட்டும் நாணயங்களையும் பூக்களையும் தன் இரு கைகள் கொண்டு விலக்கி கண்கள் சுருக்கி குனிந்து குலுங்கி சிரித்து நிற்க... கலைகிறது கனவு!

வெள்ளி, ஏப்ரல் 17, 2009

அதிசய நிகழ்வு!

என் கணவர் பல பல வருடங்களுக்கு முன் சபரிமலைக்கு வருவதாக வேண்டிக்கொண்டு வேண்டிக்கொண்ட புதிதில் இந்த வருடம் போகணும், அடுத்த வருடம் போகலாம் என்று இப்படி சில வருடங்கள் சொல்லிக் கொண்டே இருந்தவர் போக போக அது குறித்து பேசுவதேயில்லை!மறந்து விட்டாரா! இல்லை நினைவில் இருந்தும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையா தெரியவில்லை.

எனக்குள் எப்போதும் அந்த எண்ணம் ஓடிக்கொண்டே இருக்க சென்ற மாதம் ஒரு நாள் அவரிடம் கேட்டேன் ‘அய்யப்பன் கோவிலுக்கு போறேன்னு வேண்டிக்கிட்டீங்களே..எப்ப போறது? எவ்வளவு வருஷங்கள் ஆகிருச்சு சொல்லிகிட்டு! இனியும் சுணங்காமல் போயிட்டு வந்துட்டா தேவலை’ என்றேன்.

அவரிடம் இருந்து எப்போதும் போல வழக்கமான பதில் ’ம்..ம் பார்ப்போம்’ அவ்வளவுதான்! இரண்டு மூன்று நாட்கள் உள்ளூர அது பற்றியே நினைவுகள்!

இது நடந்த நான்காம் நாள் அவர் வேலைக்கு சென்றுவிட்டார். காலை 11 மணி. வெளிக்கேட்டை தட்டும் சத்தம்!(அழைப்பு மணி வேலைசெய்ய வில்லை!)உள்ளிருந்து கண்ணாடிகதவின் வழியே பார்க்கும் போது யாரோ ஒருவர் பார்க்க மலாய்க்காரர் போல தெரிந்தது! கேட்டின் அருகே நின்று கொண்டு கையை நீட்டி தானம் கேட்பது போல சைகை காண்பித்தார்! எனக்கு தெரிந்து விட்டது, இப்படி அவ்வப்போது பெண்ணோ ஆணோ யாராவது நன் கொடை கேட்டு வருவார்கள்! நானும் ஏதாவது பணம் கொடுத்தனுப்புவேன்.

இருந்தாலும் யாரென்று கேட்கலாம் என்று இங்கிருந்தபடியே ’என்ன வேண்டும்’ என்று மலாய் மொழியில் கேட்டேன், அவர் படு சுத்தமான தமிழில் கணிரென்ற குரலில் ’அய்யப்பசாமி கோவிலுக்கு காணிக்கை வாங்க வந்தேன்’ என்றார்!! அசந்து போய்விட்டேன்!.

அந்த அதிர்ச்சியுடன் மறு பேச்சு பேசாமல் உள்ளே வந்து பணத்தை எடுத்துக் கொண்டு அவரிடம் கொடுக்கலாம் என்று கேட்டருகே சென்றேன். அப்போது தான் அவரை கவனித்தேன் நல்ல உயரமாக, சிவந்த நிறம்,நெற்றியில் பெரிய குங்குமப்பொட்டு,கையில் விரித்தபடி குடை,தோளில் இந்தியாவில் போட்டுக் கொள்வது போல ஜோல்னா பை! கம்பீரமாக தெரிந்தார்!

கை நீட்டி பணத்தை வாங்கியவர் எவ்வளவு என்றுக்கூட பார்க்கவில்லை அதை அந்த பைக்குள் வைத்துக்கொண்டு கேட்டார் (எங்கள் வீட்டிற்கு வெளியே ஒரு வேப்பமரம் இருக்கிறது)

’இந்த மரம், தானா வந்ததா இல்லை நீங்க வைத்ததா?’(மலையாளம் கலந்த தமிழ்!)

’இல்லை நாங்கள் வைத்தது’

’எத்தனை வருஷம் ஆச்சு?அதுக்கு விளக்கேற்றி வைப்பீர்களா?’

’எட்டு வருஷம் இருக்கும். விளக்கேற்றுவதில்லை’

’இனிமேல் ஏற்றிவையுங்கள் எல்லாம் நல்லபடியே நடக்கும்.’ஆமா அய்யப்பன் கோவிலுக்கு போயிட்டு வந்துட்டீங்களா?

(என்ன இது!!)..’ம்.. இல்லை இன்னும் இல்லை!’

’ஏன்? நீங்க இந்தியாவிற்கு வருவதில்லையா?’

’வருவோம் அடிக்கடி வருவோம்’

’அப்போ ஏன் கேரளாவுக்கு வரலை?உங்க ஊர் எங்க இருக்கு?’

சொன்னேன்.

’சரி இங்கே இவ்வளவு தூரத்தில் இருந்து அடிக்கடி ஊருக்கு வரீங்க அப்போ அங்கருந்து கேரளா ரொம்ப தூரமில்லையே? அதுல ஒரு தடவையாவது சபரிமலைக்கு வந்துட்டு போயிருக்கலாமே? அடுத்த முறை அய்யப்பன் கோவிலுக்கு அவசியம் வாங்க’

’அவசியம் வரணும் வரோம்’. நீ…ங்க… எங்க இருகீங்க?

’நான் கேரளா..! அங்கருந்துதான் வரேன் இப்படித்தான் அப்பப்ப எப்பவாவது வருவேன், வந்து நாளாச்சு அதான் இப்ப வந்தேன். சரி போயிட்டு வரேன்மா எதை பத்தியும் கவலைப்படவேண்டாம் எல்லாம் சுபிட்ஷமாக இருக்கும் வரட்டுமா என்று சொல்லியபடி அவர் பாட்டுக்கு போய்விட்டார்!

இன்னும் பிரமிப்பிலிருந்து விடுபடவில்லை நான்!