வியாழன், செப்டம்பர் 24, 2009

நாட்டரசன்கோட்டை நாயகி !

கண்களுக்கு ஒளிதரும் கண்ணுடைய நாயகி கண்ணாத்தாள்!

சிவகங்கை தேவஸ்தானம் மதுராந்தகி நாச்சியார் ஆளுகைக்குட்பட்ட 86 திருக்கோயில்களில் சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவிலும் ஒன்றாகும். முத்துக்குட்டிப்புலவர் என்பவர் ”கண்ணுடைய நாயகி அம்மன் பள்ளு என்று கண்ணாத்தாளின் மகிமையை சிற்றிலக்கியமாகவே படைத்திருக்கிறார்!.

கண்ணுடையநாயகி 6 சகோதரிகளுடன் தோன்றியதாக முத்துக்குட்டிப்புலவர் சொல்கிறார்..

விரும்பு காளையில் வாள்மேல் நடந்தாள் வாளைப்பனங்குடி பெரியநாயகி , வெற்றி யூரினில் அம்மன் , அரும் பொருளுவாட்டிப் பெரியாள் , அடுத்த மங்கலந்தன்னில் வாழ் அறியவள் இவளாது பெண்களுக்கும் பெரியவளார்க்கும் பெரியவள் பெரும்புரியெல்லாம் பெற்றவள் என்னைப் பெற்றதாய் கன்ணுடையவள் என்று.

அந்த 6 அன்புச்சகோதரிகள் காளையார் கோவில் வாள்மேல் நடந்த அம்மன், பாகனேரி புல்ல நாயகி அம்மன், பனங்குடி பெரிய நாயகி அம்மன், வெற்றியூர் அம்மன், உருவாட்டி பெரிய நாயகி அம்மன், மறவங்கலத்தில் அரிய நாச்சி அம்மன் ஆகியோர்கள் ஆவார்கள்.

கண் சம்பந்தப்பட்ட நோய் எதுவாய் இருந்தாலும் கண்ணாத்தாளை வேண்டி(வெள்ளியினால் செய்த) கண்மலர் வைத்து வணங்கினால் போதும்.அதுபோல கண் மற்றும் உடம்பின் எந்த பாகமென்றாலும் நோய் குணமாக வேண்டி மாவிளக்கு(அரிசியுடன் வெல்லம் சேர்த்து இடித்து செய்வது) ஏற்றுவதாக வேண்டி அம்மன் பாதத்தில் ஏற்றி வைத்து அவ்விளக்கை எடுத்து உடம்பில் பாதிக்கப்பட்ட இடத்தில் சிறு துணியை விரித்து அதன்மேல் வைத்து எடுத்து குணமாக்கு தாயே என்று வணங்கி பலன் கண்டவர்களும் ஏராளம்!

நாட்டரசன்கோட்டையில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறும் களியாட்டம் வெகு சிறப்பானது. மேலும் பதினெட்டுச்சித்தர்களில் ஒருவரான அழுகுணிச்சித்தர் இவ்வூரில்த்தான் அடங்கியுள்ளார் என்பதும் கம்பன் சமாதி இங்குதான் உள்ளது என்பதும்
போற்றுதற்குரியதாகும்!.

அவிச்ச நெல்லும் முளைக்கும் அதிசயம் இந்த ஊரில்த்தான் நடப்பதாக பக்தர்கள் சொல்கிறார்கள்!

கண்ணாத்தாள் கோவிலின் முன்பு உள்ள தெப்பக்குளமும், கோவிலின் முகப்பு மண்டபமும்,சிற்பங்களும் அவசியம் பார்த்து பயனடைய வேண்டியவை.

கருத்துகள் இல்லை: